Friday, October 31, 2014

சிட்டுக்குருவியைக் காணவில்லை.!
என காங்கிரீட் காட்டுக்குள்ளிருந்து கத்து.

உலக வெப்பமயமாதலை எவ்வாறு குறைக்கலாம்?
ஏ .சி அரங்கினுள் வியர்க்கப்பேசு.

குடியின் கொடுமைகள் என்னென்ன?
'பீர'டித்து நுரைக்கப்பேசு.

che படம் போட்ட பனியன்,ஜீன்சுடன்
பொது இடங்களில் நிமிர்ந்துலாவு.

முகநூலில் கணக்குகள் தொடங்கு.
ஆண் பெயரில், அனைத்தையும் அள்ளிவிடு.
பெண் பெயரில், ஆண்களை அலையவிடு.

பெண்கள் வன்புணர்ச்சிக்குக் காரணம்,
தொலைக்காட்சியின் கலாச்சாரச் சீரழிவு,
இலவசங்கள் தேவையா?
ஆவண ,குறு,உலகப்படங்கள்,
நாட்டுப்புறக்கலை,இசை,ஓவியம்.
வரலாறு,மனோதத்துவம்,கல்வி,கலவி....
தொடர்ந்து ஏதேனும் பேசிக்கொண்டேயிரு.
தூக்கத்தில் கூடத் துணையுடனிரு.

கவனக்குறைவாக
வார்த்தைகள் நிறுத்தித் தனிமையில்
யோசிக்கத்தொடங்கிவிட்டால்,
விலாவில் இரு சிறகுகள் முளைக்கும்.
வானம் திறக்கும்.
வாழ்க்கை முடிக்கும்.


No comments:

Post a Comment